கவிதை - ஊமையின் மடல் - சமீரா
பரிவான வார்த்தைகள்
படையெடுத்து வருகையில்
தலையசைப்புடன் தவிர்த்திடும் என்னை..!
தாழ்வுணர்ச்சியை தூண்டிவிடும்
பரிதாப பார்வைகள் மட்டும்
பதம் பார்ப்பது ஏனோ...!
உணர்ச்சி வேகத்தில்
உறவுகளை உடைத்தெறியும்
வார்த்தைகள் ஈட்டியாய்
வருவதற்கும் வழியில்லை..!
விதண்டா வாதங்களும்
வீணே இட்டதில்லை..!
விளக்கங்களும் தேவைப்பட்டதில்லை..!
இன்னும் ஏனோ
இன்னல் தரும் பார்வைத்தீண்டல்..!
என் உள்ளத் தோன்றலெல்லாம்
என் பேனா முனைகள் பேச
மொழிகள் பல கடந்த
மௌனமும் எனக்கு பேரானந்தமே..!
ஊமையாய் போனது இதழ் மட்டுமே..!
உள்ளிருக்கும் இதயமல்லவே..!
குறையென்றே நினைக்காததினை குறித்து
குறைகாணும் பார்வை ஏனோ..!
{kunena_discuss:779}