கவிதை - தவிப்பிலே ஓர் தாய்..! - சமீரா
உன்னை எண்ணியே
உருகித் தவிக்கிறேன்..!
உள்ளிருக்கும் உள்ளமோ
உலைக்களமாய் கொதிக்குதே..!
அழகு மின்ன அன்பிலே
அன்னையென்னை காணவருகிறாய்..!
ஆறுதலாய் பேச முடியாமல்
ஆற்றாமையில் நானோ கண்ணீரிலே..!
என்னை ஆசையுடன்
எட்டிப் பார்க்கிறாய்..!
ஏக்கத்துடன் உன்னை காண்கையில்
எல்லை மீறி அள்ளி அணைக்கவே
என்னிலை மறந்து முயல்கிறேன்..!
என் இயலாமை தடுக்க
என் நெஞ்மோ நொறுங்குதே..!
இருவருக்கும் இடையிலே
இடையிட்டு நிற்கிறதே
இன்னல் தரும் முள் வேலி
இதயமோ இன்னும் காயப்படுதே..!
கருவினிலே நீ இருக்கையில்
கடலளவில் கற்பனை ..!
காத்திருந்தேன் கனவுகளுடன்
கண்மணியே உன்னை கையிலேந்த..!
விதி விடுத்த விபத்தொன்று
விளைந்திருக்க வேண்டாம்..!
வீணாய் நானும் நினைவிழந்து இங்கு
விடைத்தேடி வந்திருக்கவேண்டாம்..!
நினைவுகள் மீள
நிதமும் சோதனையாய்
நிர்பந்தித்த காலம் கடக்க
நிம்மதியின்றியே நானோ..!
தாயுமானவனோடு நீ இருந்தும்
தாயன்பிற்காய் தவிப்பு ஏனோ..!
தண்டனையாய் எண்ணியே
தனிமையிலே அழுகிறேன் நானோ..!
மீதி இருக்கும் சில நாட்களோ
மிதமாகவே நகருதே..!
மணி நேரமும் மாதங்களாய்..
மனமோ உணருதே...!
{kunena_discuss:779}