கவிதை - கண்ணீர்... - சமீரா
வார்த்தையில்லா மௌனங்களில்
வார்க்கப்படும் வெற்றுப் புன்னகை
உதடுகளில் ஒட்டாமல்
உதிரும் தருணங்களில்
மறைந்து நிற்கும்
மரணத்தின் எல்லை
இதுவென காட்டிய
இதயத்தின் வலி...
ஆழி கண்ட ஆழம் கூட
ஆழ் மனதினை விட குறைவு என்றே
ஆறாம் அறிவும் நம்பிவிடும்..
மறக்க துடிக்கும் வேதனை
மற்றவர் முன் மறைக்க
மனதோடு மண்டியிட்டு
கண்ணோடு கரிக்கும்
கண்ணீரையும் கட்டுப்படுத்துகையில்
சுற்றி இருக்கும் உலகத்தில்
சுதந்திரம் அற்ற பறவையாய்
நான் மட்டும் தனிமையுடன்..
உடைந்து அழவேண்டிய
உணர்ச்சி கூட உள்ளத்தினுள்ளே
சிறைவைக்கப்படுகையில்
சின்ன ஆறுதலாய் நித்திரைக்கான
நீண்ட காத்திருப்பில் தலையணை
நனைக்கும் கண்ணீர்..