(Reading time: 2 - 3 minutes)

கவிதை - தீயாய் நீ.... - சமீரா

drawing

தூரத்தில் ஓர் ஈனக்குரல்
துரத்துகின்றதே..
தூக்கத்தினையும் துடைத்தெறிந்து
துக்கத்தினை பரிசளிக்கின்றதே..
துடிதுடிக்க வதைத்த வஞ்சகனை
தூக்கிலிட்டாலும் நீ பட்ட 
துன்பத்துக்கு ஈடாகாதே..
எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..
எதிர்மறை எண்ணங்களுடன்
எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனை
எதிர்த்து நிற்க கற்றுக்கொள்..
ஆண் எனும் ஆணவத்துடன்
அரிப்பெடுத்து அலையும்
அயோக்கியன் அத்துமீறீனால்
அவன் ஆண் என்ற அடையாளத்தை 
அழிக்கவும் தயங்காதே..
சாத்தான்கள் வாழும்
சாபத்துடனான இந்த சமூகம் நீ
சாதித்தாலும் சந்தேகிக்கும்
சரிந்தாளும் விமர்ச்சிக்கும்..
சற்றும் யோசிக்காதே..
உனக்கான பாதுகாப்பு
உன்னிடத்திடத்தில் தான் உண்டு..
உன் தடுமாற்றம்
உன்னை வீழ்த்தும்..
உணர்ச்சிகளை என்றும் முன்நிறுத்தாதே..
உன் பலவீனங்களை அடுத்தவர் பலமாக்காதே..
உள்ளுணர்வு தட்டியெழுப்பும் போது
உன் அறிவினை பட்டை தீட்டு..
ஆபத்துகள் சூழ்ந்த உலகம் இது
அன்னியர் என்றால் எச்சரிக்கையாய் இரு
அன்பானவர் என்றால் சற்று சந்தேகம் கொள்..
தீங்கு சூழ்ந்த பயணமிது பெண்ணே..
தீயாய் நீ இரு ..
தீயவர் அழிந்து போகட்டும்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.