கவிதை - வறுமை - சமீரா
ஊர்க் கோடியில் ஓர் ஓலை குடிசை
உள்ளுக்குள்ளே ஓராயிரம் ஓலம்
ஊரார் அறியாமலே தொடரும்
உணவின்றிய அவலம்..!
வறுமை எனும் வலியகரம்
வலைவீசி சிறைப்பிடித்த
வண்ணச்சித்திரம் வழுவிழந்து
வாய்ப்பேச முடியாமல் தவிக்கிறது..!
கசங்கிய கந்தல் உடையில்
கண்களில் கண்ணீர் கசிய
கருகிக் கொண்டு வரும்
சின்னச்சிறு முல்லை மொட்டு..!
நரம்புகள் தளர்ந்து போக
நா வறண்டு தாகமெடுக்கையில்
உடனிருக்கும் சாடியும் நீரில்லா ஏக்கத்தில்
உடைந்தால் உன்னிலை என்னவாகும்?
{kunena_discuss:779}