கவிதைத் தொடர் - 03. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்
எனக்காய் வந்து விடு என்னவனே
பாலை வனத்தின் சுடு மணலில்
புழுவாய் துடிக்கிறேன்
வானமாய் இல்லாமல்
ஒற்றை குடையாய் இளைப்பாற
நிழல் தந்திட
வந்து விடு என்னவனே!!!!!!!!
ஒற்றை நீர் துளி இல்லாத
தாகத்தில் தவிக்கிறேன்
ஆறாய் இல்லாமல் மழை துளியாய்
தாகம் தீர்த்திட
வந்து விடு என்னவனே!!!!!!!!
யாருமற்ற தனிமையில்
பயத்துடன் தவிக்கிறேன்
அச்சுருத்தும் பயம் நீக்கி
நான் சாய தோள் தந்திட
வந்து விடு என்னவனே!!!!!!!!
வாழ்க்கை என்னும் இருட்டறையில்
ஒற்றை கீற்று வெளிச்சத்துக்காக
மறுகி நிற்கிறேன் சூரியனாய் வேண்டாம்
மெழுகு வர்த்தியாய் ஒளி தந்திட
வந்து விடு என்னவனே!!!!!!!!
சொந்தங்களின் சுடு சொற்களில்
வெந்திருக்கிறேன் நதியாய்
இல்லாமல் பனி துளியாய்
என்னை குளிர வைக்க
வந்து விடு என்னவனே!!!!!!!!
நிலாக்கால நினைவுகளில்
நீங்காத இடம் பிடித்தவனே
தனிமையில் தவிக்கிறேன்
கண்ணீர் துடைக்க
வந்து விடு என்னவனே!!!!!!!!
ஒற்றையடி பாதையில் ஒற்றையாய்
நடக்கும் துயரமாய்
இருக்கிறது வாழ்க்கை
கை கோர்த்து கூட்டி செல்ல
வந்து விடு என்னவனே!!!!!!!!
ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனது
பாறாங் கல்லாய் சிதைந்து
கிடக்கிறது அதை
சிலையாக செதுக்க சிற்பியாய்
வந்து விடு என்னவனே!!!!!!!!
துவண்டு விழும் வேளையில்
தாங்கி பிடிக்க துணை இல்லாமல்
அல்லாடுகிறேன், நான் இருக்கிறேன்
என்று என்னை தாங்க
வந்து விடு என்னவனே!!!!!!!!
கண்ணீரில் கரையும்
என் அழுகை நிறுத்தி
கண்ணீர் துடைக்க
மென்மையான கைக்குட்டையாய்
வந்து விடு என்னவனே!!!!!!!!
காதல் உணர்வுகளில்
சிக்கி தவிக்கிறேன்
சிக்கலை தீர்த்து என்னை
உன்னோடு அள்ளி கொள்ள
வந்து விடு என்னவனே!!!!!!!!
உயிர் உறையும் தருணத்தில்
மூச்சு காற்றுக்காக
ஏங்குகிறேன் உன் உயிர் சுவாசத்தை
எனக்கு பிச்சை இட
வந்து விடு என்னவனே!!!!!!!!
வெள்ளை காகிதங்களாய்
இருக்கிறது என் கனவுகள்
அதற்கு வண்ணமென்னும்
உயிர் கொடுக்க
வந்து விடு என்னவனே!!!!!!!!
பிறர் காய படுத்திய
காயங்களால் வலிக்கும்
மனதுக்கு அன்பென்னும்
மருந்திட்டு வலி போக்கிட
வந்து விடு என்னவனே!!!!!!!!
உன் ஒற்றை தொடுகைக்காக
காத்திருக்கும் என்னை தொட்டு
இந்த கொடூர உலகத்தில்
இருந்து முக்தி கொடுக்க
வந்து விடு என்னவனே!!!!!!!!
என்னவனுக்கான தேடல் தொடரும் .....
{kunena_discuss:779}