கவிதை - என் செல்லக் கண்ணனே - சிந்தியா ரித்தீஷ்
என் செல்லக் கண்ணனே
என்னைப் பாடாய் படுத்துகிறாய் தினந்தோறும்
நினைவாறும் கனாக்கடலும் சங்கமிக்க
நம்முள் மலர்ந்த இந்த காதலும் காய்ச்சுகிறது என்னை
எந்தன் விரகதாபங்களும்
உன் விலகும் தாவல்களும்
இன்னும் எத்தனை காலத்துக்கடா
உன்னை அறிந்தும் நீ
என்னை உன்னுள் புதைக்கச் செய்தாய்
இன்றோ நடிக்கின்றாய்
எல்லாப் பழியும் என்மேல் போட்டு
அன்பால் விலங்கிட்டுச்
சிறைப் பிடிக்கின்றாய் என்னை நீயும்
எனினும் நீ அறியாத ஒன்று
என்னைச் சிறைப்பிடிக்கும் நீயும்
கைதாகின்றாய் என்னுடனே
என் ஊனுடல் முழுதிலும்
நீயே கலந்திருப்பதால்
இறுதி மூச்சும் உனக்காக்
கொடுக்கத் துடிக்கும்
என் மனம் அறிந்தும் நீ
நகர்ந்திடுவாய் சற்றே
என்றோ புரியும் உனக்கு
அதுவும் என்னைக் கொடுத்தாலும்
அதை எனக்கே திருப்பிவிடுவாய்
உன் உயிர் வடிவில் என்று
காத்திருக்கின்றேனடா என் காதலா
என்றோ ஒரு பொழுது
அன்று நிலவும் மதிமயங்கும்
உன் கதிரும் எனை இழுத்தணைக்கும்
கிரகணமும் நிகழ்ந்திடும் என்றே
என் கனவில் தீயீட்டுக் கொழுத்தி
குளிர் காய்கின்றாய் நீயும் நினைவினில்
போகட்டும் கார்காலம் அது இப்போது
எனினும் சுழலும் புவியும் அடங்கிடாதே
மீண்டும் ஒரு இளவேனில் வரும்
நீயும் பிறப்பாய் புதிதாய்
இலை துளிர் கிளையாய்
உன்னுள்ளும் மலர்ந்திடும்
நம் புதுக் காதல் -அப்போது
நாம் வடித்திடுவோம்
பல கதைகள்... நம் கண்களில் ...
என் செல்லக் கண்ணனே....
{kunena_discuss:779}