(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்

dreams

கனத்த மௌனத்தைக் கலைத்திட எண்ணாது
அலை அலையாய் சிந்தனைகள்
என் மனக் கடலில்
தினமும் புரள்கின்றன...
ஏதோ சில பாடல் வரிகள்
என்னுள் வந்து போகும்...

சில ஞாபகச் சிப்பிகளினுள்
திரண்ட முத்தாய் இன்னும் 
ஒளிராமல் கிடக்கின்றன- அவன் நினைவுகள்

கனவுதான் இது- இரு கை கோர்த்து 
நான் நிலம் பார்க்க 
அவன் நிலாக் காட்டிய தருணங்கள்
மெல்லிசையாய்
மெல்லிய சாரலாய் 
வருடும் மயிலிறகாய்
இன்னும் எத்தனையோ பலவாறாய்
வருடுகின்றன

எனக்கும் ஆசைதான்- சிறு பேராசையோ எனத் தோன்றும்
கற்பனையின் படகுதனில்
கானல் நீர்க் கடல்
கிழித்து
காவியம் படைக்க
அவனும் நானும்
புறப்படுவோம்.....

வெள்ளி தெரியும் வரை
ஏன் சிலவேளை
அது மறையும் வரை
சிறு சொல் மாலை சேர்த்து
முடிவிலியாய் கோர்த்திடுவோம்....

கன்னியவள் கைபிடித்து 
திரும்ப முன்னர் இழுத்தணைத்து 
நெற்றியிலே சிறு இதழொற்றி 
இனிமைகளில் திளைத்திடுவோம்...

விடியும் வரை விழித்திருந்து 
விடிகாலை வண்டின் சத்தம் 
கேட்கும் வரை கதை பேசி
அதிகாலை துயில் கொள்வோம்....

அதிரடியாய் சில நேரம் அன்னையின் 
அடியினால் எழும் போது தோன்றும்....
அவனும் என் கனவுகளும்

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.