கவிதை - உழைப்பாளர்களுக்கு ஒரு சல்யூட் - சசிரேகா

உழைக்கும் பாமர மக்களுக்கு
இன்று நன்றி சொல்லும் தினம்
உழைப்பாளர்களுக்கு இன்று
விடுமுறை தினம்
பல இன்னல்கள் வந்த போதும்
இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும்
பல உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்.
உழைப்பாளர்களின் உழைப்பை
சுரண்டி அதில் குளிர் காய்பவர்களை
கண்டு கோபமிருந்தும்
தன்னுடைய உழைப்பு தினம் தினம்
திருடப்படுகிறதே என்ற
கவலையிருந்தும்
அதையெல்லாம் போக்கிக் கொண்டு
உழைப்பே பிரதானம் என
நாள் முழுதும்
சிரமப்பட்டு வேலை செய்யும்
உழைப்பாளிகளுக்கு
ஒரு சல்யூட்
எந்தவித தட்பவெட்ப சூழ்நிலையிலும்
தன் உழைப்பை மட்டும்
நம்பி இன்று வரை
தன்னையும் தன்
குடும்பத்தையும்
காப்பாற்றும் உழைப்பாளிக்கு
ஒரு சல்யூட்
விவசாயியின் உழைப்பால்
இந்த மண்ணும்
மனிதனும் தினமும்
காப்பாற்றப்படுகிறார்கள்
விவசாய உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்
சுரங்கங்களிலும் குவாரிகளிலும்
உழைக்கும் போது
பல முறை தங்கள் உயிருக்கு
ஆபத்து வந்த போதும்
பயமில்லாமல் தொடர்ந்து
அங்கு வேலை செய்யும்
உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்
சுற்றுலாவுக்கு வந்த
மக்களுக்கு தகுந்த
வழிகாட்டியாக தெரியாததை
தெரியப்படுத்தும்
வழிகாட்டி வேலை செய்யும்
உழைப்பாளிகளுக்கு
ஒரு சல்யூட்
ஓட்டல்களில் வெயிட்டர்களாகவும்
பல்வேறு கடைகளில் தொழிலாளர்களாகவும்
கடினமான பணிகளில்
வலுக்கட்டாயமாக ஈடுபத்திய போதும்
வறுமையை நினைத்து
குடும்பத்தை நினைத்து
இன்றும் உழைத்துக்
கொண்டிருக்கும்
உழைப்பாளிகளுக்கு
ஒரு சல்யூட்
குடிசை தொழில்களிலிருந்து
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை
தினம் தினம்
உழைத்து போராடி
இன்று ஒரு நாள்
விடுமுறையை கூட
சிலர் அனுபவிக்காமல்
தொடர்ந்து வேலை செய்து
தங்கள் உழைப்பை
உலகுக்கு எடுத்து காட்டிக்
கொண்டிருக்கும்
உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்
தினமும் பல பேரின்
ஷூக்களை பாலீஷ் போடும்
உழைப்பாளி
ஒரு நாளும் ஷூ அணிந்ததில்லை
அது அவனுக்கு தேவைப்படவும் இல்லை
மானம் அவமானம் பாராமல்
துணிந்து
ரோட்டில் உள்ள கழிவுகளை
சுத்தம் செய்பவர்களை
கண்டு ஊர் சிரித்தாலும்
அந்த ஏளனங்களை துடைத்து போட்டு
இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும்
அந்த உழைப்பாளிகளுக்கு
ஒரு சல்யூட்
இனிப்பு கடைகளில்
வேலை செய்பவனுக்கு இனிப்பு
சொந்தமாகாது
கட்டுமான பணிகளில்
வேலை செய்பவனுக்கு
அந்த கட்டிடம் சொந்தமாகாது
வீடு வீடாக
பூ விற்கும் பூக்காரிக்கு கூட
அந்த பூ சொந்தமாகாது
தெருக்களில் விற்பனை செய்யும்
கடைக்காரர்களுக்கு கூட
விற்கும் பொருட்கள் சொந்தமாகாது
கடல்தாண்டி
வேலை செய்பவர்களுக்கு
அந்நாடு சொந்தமாகாது
குறைந்த சம்பளத்தில்
குடும்ப சூழ்நிலைக்காக
கஷ்டப்பட்டு
உழைக்கும் வகுப்பினர்க்கு கூட
செய்யும் வேலை சொந்தமாகாது
அபாயகரமான தொழிலில்
வேலை செய்பவனுக்கு
அவன் உயிர் கூட சொந்தமாகாது
இப்படி
உழைப்பால் எதையும்
சொந்தமாக்கிக் கொள்ளாமல் போனாலும்
தன் உழைப்பை மட்டும்
தனக்கே சொந்தமாக்கிக்
கொண்டு
இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும்
உழைப்பாளிக்கும்
ஒரு சல்யூட்
உழைப்பாளர்களுக்கான
தினமான இன்று
உழைக்கும் அனைவருக்குமான
நன்றி சொல்லும் தினம்
எத்தனை பேர் தன் அருகில்
இருக்கும்
உழைப்பாளர்களுக்கு
அவர்கள் செய்யும் தொழிலை
பாராட்டி
நன்றி செலுத்தியிருக்கிறார்கள்
அவரவர்களுக்கு இருக்கும்
பல வேலைகளில்
இந்த நாளை பலரும்
மறந்துவிடுகிறார்கள்
இன்றாவது ஒரு நாளாவது
உழைக்கும்
மனிதர்களை கண்டால்
அவர்கள் செய்யும் எத்தொழிலாளானாலும்
அவர்கள் செய்யும்
வேலைக்கும் அவர்களுக்கும்
ஒரு சல்யூட்
விதியை நினைத்து
ஓரமாக முடங்கி கிடக்காமல்
அந்த விதியை எதிர்த்து
போராடி உழைத்து
உழைப்பிற்கேற்ற ஊதியம்
கிடைக்காமல் போனாலும்
செய்யும்
உழைப்பை விட்டுவிடாமல்
இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும்
உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்
துன்பம் தரும் சொற்கள்
பல கேட்டும்
அச்சம் தரும் செயல்கள்
பல செய்தும்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
பொருளாதாரத்தை
ஈட்டித் தந்துக் கொண்டிருக்கும்
அனைத்து
உழைப்பாளிகளுக்கும்
ஒரு சல்யூட்
வயது வரம்பின்றி
சிறுவர்களில் இருந்து
முதியவர்கள் வரை
பாராபட்சமின்றி
கஷ்டப்பட்டு
வேலை செய்யும்
பாமர மக்களுக்கு
ஒரு சல்யூட்
உழைப்பாள வர்க்கத்திற்கு
ஓங்கி ஒரு குரல்
கொடுக்கவில்லையென்றாலும்
மனமார
அவர்கள் செய்யும்
உழைப்புக்கு
நன்றி செலுத்தும் விதமாக
ஒரு சல்யூட்
உழைப்பின் மூலம்
பெட்டிக்கடை வைத்திருந்தவன்
கூட இன்று சொந்தமாக
சூப்பர் மார்க்கெட் வைக்கிறான்
படித்த படிப்பிற்கு
வேலையில்லாமல்
கிடைத்த வேலையை
செய்துக் கொண்டு
தனக்கான ஒரு அங்கீகாரத்தை
பதிய வைக்கிறான்
தன்னை உயரவிடாமல்
இந்த சமூகம் பின்னுக்கு
தள்ளின போதும் முயற்சி செய்து
முன்னேறி தனக்கான
பாதையை
லட்சியத்தை
அடைகிறானே
அவனது உழைப்புக்கு
ஒரு சல்யூட்
இந்த மே தினத்தை
பல நாடுகள் பலவிதமாக
கொண்டாடுகிறார்கள்
அறுவடை திருநாளாகவும்
பசுமை திருநாளாகவும்
கோடைத் திருவிழாவாகவும்
வெற்றிகண்ட விழாவாகவும்
வசந்த கால விழாவாகவும்
இன்று வரை கொண்டாடப்பட்டாலும்
வியர்வை சிந்தி
உழைக்கும்
உழைப்பாளர்களின் விழாவாகவே
இந்த தினம்
கொண்டாடப்படுகிறது
தந்தை பெரியாரும்
சிங்கார வேலரும் தமிழகத்தில்
மேதினத்தை
கொண்டாடிய பெருமைக்குரியவர்களுக்கும்
மேதினத்தை நினைவுப்படுத்தும்
விதமாக அதற்கு
நினைவுச்சின்னம்
அமைத்தவர்களுக்கும்
நாம் செய்வோம் சல்யூட்
மேதினம் விடுமுறையானாலும்
இன்றும்
உழைத்துக் கொண்டிருக்கும்
பல்வேறு துறையை சேர்ந்த
உழைப்பாளர்களுக்கு
ஒரு சல்யூட்
கிராமங்களிலும் சரி
நகரங்களிலும் சரி
உழைக்கும் உழைப்பாளர்கள்
உழைத்துக் கொண்டே
இருக்கிறார்கள்
அவர்களுக்கு
கிடைக்க வேண்டிய
மதிப்பும் மரியாதையும்
மறுக்கப்பட்டு வருகிறது
உழைப்பாளர்களின்
முகத்தில் இருக்கும் ஏக்கமானது
அவர்களது உழைப்புக்குண்டான
மதிப்பையும் மரியாதையையும்
ஊதியமும் மறுக்கப்பட்டதால்
இல்லாமையால் ஏற்பட்டது.
என்றாவது ஒரு நாள்
அவர்கள் ஏக்கங்களுக்கு
விடிவு வரட்டும்
உழைப்பில் சிறியவை பெரியவை
என்ற பேதம் கிடையாது
உழைப்பாளர்களில்
சிறியோர் பெரியோர்
என்ற பாகுபாடு கிடையாது
ஊதியத்தில் காட்டும் பாரபட்சம்
பல உழைக்கும் மக்களுக்கு
தரும் வலி
அதை உணர்ந்தவர்கள்
மாறலாம்
உழைப்பாளர்களை
கௌரவிக்கலாம்
அவர்களுக்குண்டான
மதிப்பை தந்து
அவர்களுக்கு
நாம் அனைவரும் அடிப்போம் பெருமையாக
ஒரு சல்யூட்
”சில்சி குழுமத்திற்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேதின வாழ்த்துக்கள் மற்றும் உங்களின் உழைப்புக்கும் நான் செய்கிறேன் ஒரு சல்யூட்”
தொடரும்...
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.