கவிதை - கல்யாணக் கனவு - கலை யோகி
என்னைப் புரிந்து கொண்ட தலைவர் அவர்
தன்னைப் புரிந்து கொண்ட மனைவி நான்.......
என்ற நிலையே நான் காணும் கனவு.....
அவர்காக நான் இருக்கும் போது...
எனக்காக அவர் இருக்க வேண்டும் என நான்
கனாக் காண்பது பஞ்சமா பாதகமா???
நான் மாமா மாமிக்கு மேலும் ஒரு பெண்ணாக இருப்பேன்....
அவரும் தன் மாமா மாமிக்கு மேலும் ஒரு ஆணாக இருக்க வேண்டும்....
அவர்க்காக நான் உறங்குவேன்
எனக்காக அவர் கனவு காண வேண்டும்.....
என் சுவாசத்தில் சரிபாதி அவர்!
நான் கணாக்காணும் தலைவர்
பொன்னுக்கும் பொருளுக்கும் விலையாக் கூடாது....
அழகு பாதி ஆன்மா பாதியாக உள்ள ஆண்மகனாக!
என் கண்ணால் உலகைப் பார்க்கும் ஒருவராக
தனக்காக ஓர் உயிர் உள்ளது என்பதை உறக்கத்திலும் மறவாத ஒருவராக
எனக்கு அவர் வேண்டும்....
நான் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் நான் சொல்லி அவர் தெரிய வேண்டும் என்ற நிலை மாறி...
சொல்லாமல் உணர வல்லவராக வேண்டும்....
கொடுப்பதைப் பெற்றுக் கொள்வதோடு
கேட்காத போதும் கொடுக்கும் வள்ளலாக வேண்டும்....
வெயிலுக்கு நிழலாக மழைக்குக் குடையாக
விழிக்கு இமையாக விழிக்கு விழியாக அவர் வேண்டும்.....
ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
பக்கத்துக்குத் துணை பாசத்துக்குப் பிள்ளை....
பற்றுவைக்க சொந்தம் பற்றவைக்காத நாத்தாண்.....
விருந்துக்கு உறவு விருந்து வைக்க நான்... ஒத்தாசைக்கு அவர்....
நான் அவரிடம் எதிர்பார்பன
அவர் என்னிடம் எதிர்பார்க்க உரிமை உண்டு....
சராசரி வாழ்க்கை அல்ல நான் காண விரும்புவது... சரித்திர வாழ்க்கை...
நாடு தானே நம்மைப் பெற்றது
நாமே தானே நாட்டைக் காப்பது என்ற நிலை...
முந்தானையில் முடிந்து வைக்கவும் ஆசையில்லை
முற்றாக அடகு வைக்கவும் விருப்பமில்லை...
சேர்ந்திருக்கும் வேளைதனில் ஜீவன் பிரிந்தென்றால்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலம் என்பேன்...
மாடி வீடல்ல நான் எதிர்பார்ப்பது
மடி ஒன்றே போதும் அது மலராக இருந்தால்...
அசைவின் அர்த்தம் புரிந்தவராக
அயர்வின் களைப்பை அறிந்தவராக
வேண்டும்...
ஈரேழு ஜென்மம் என்றில்லை
இந்த ஜென்மத்திலேயே மொத்தமும் வேண்டும்......
{kunena_discuss:779}