கவிதை - காதல் வலி - ரம்யா
அவன்:
வலி கொடுத்த தேவதையே காதல்
வலி கொடுத்த தேன்மொழியே
நீ கொடுத்த
புத்தாடை அணிந்து கொண்டேன்
பூங்கொத்தும் வாங்கி வந்தேன்
இதழில் புன்னகை ஒட்டி வந்தேன்
காதல் பாரமும் ஏற்றி வந்தேன்
நட்பாய் பிறந்த என் நேசம்
காதலாய் கனிந்து வர
என் இதயத்தில் உனை ஏற்றி
இல்லறமே நடத்தி விட்டேன்
வேகமாய் வந்த கால்கள்
விரைத்து நின்றதடி என்
ஒருதலை காதல் தான் தலைவி
நீயில்லாமல் தவிக்குதடி
வாழைபந்தலும் வாத்திய ஓசையும்
பன்னீர் தெளிப்புகளும் சந்தனமும் சர்க்கரையும்
ஏளனமாய் எனைபார்த்து இன்று உன்
திருமணம் என்று எச்சரிக்கை செய்யுதடி
உன்னழகு காண இருகண் போதாதென்றேன்
இன்று என் கண்கள் குருடாக வேண்டுகின்றேன்
உன்னிடம் காதல்சொல்ல முயன்ற அன்று ஊமையானேன்
இன்று என் செவியும் செவிடாக ஏங்குகின்றேன்
மணமகளாய் உனைக்காண
மனதார நினைத்தவன் தான்
உன் பக்கத்தில் மணமகனாய்
உட்காரும் பட்சத்தில்
பட்டுபுடவை ஜொலிஜொலிக்க
பொன்நகைகள் மினுமினுக்க
அன்னநடை போட்டுவரும்
என் அன்பான காதலியே!
அன்று காதல் சொல்ல துணியவில்லை
இன்று வாழ்த்துசொல்ல வந்துவிட்டேன்
வலி கொடுத்த தேவதையே காதல்
வலி கொடுத்த தேவதையே
மனதார வாழ்த்துகிறேன்
மண்டப வாசலிலேயே….
அவள்:
பட்டாடை உடுத்தி கொண்டேன்
பொன்நகைகள் பூட்டிக்கொண்டேன்
தோழிமார் சூழ மேடையும் ஏறிவிட்டேன்
நண்பனாய் நுழைந்து
காதலாய் கலந்து விட்ட கண்ணாளா
உம்மைத்தான் கண்களால் தேடுகின்றேன்
காதலால் கரைகின்றேன்
மணமகளாய் நான் மேடையேற
மணமகனாய் நீர் வேண்டுமென்று
புதுசட்டை பையில் காகிதம் கண்டீரோ
ஒருதலை காதல் என்று கிழித்து போட்டீரோ
தூதாய் நான் கொடுத்த புத்தாடை போட்டுவந்து
துரிதமாய் எனை கொண்டள்ளி போவீர் என்று
கனவு பல கண்டுவிட்டேன்
பகல் கனவு தான் கண்டுவிட்டேன்
இன்னொருவர் மாலை ஏற்கும் இந்நேரம்
இனியவரே நீர் மட்டும் இல்லாமல் போனீரே
சிற்பமாய் சிரித்திருந்த என்னை காதல் வலியால்
கல்லாய் செய்தீரே
சொல்லாத காதல் எல்லாம் சுமையாய்த்தான்
போகுமென்று அறிந்து கொண்டேன்
இல்லாத காதலோடு இல்லறம் நடத்தத்தான்
கழுத்தில் தாலியும் ஏற்றுக்கொண்டேன்
மண்டப வாசலில் யாரது நீர் தானோ!
உம் கண்ணில் கண்ணீர் துளி தானோ!
என் விதியே!என் செய்வேன்
என் விதியே என் செய்வேன்
என்னை வாழ்த்தி நிற்கும் தெய்வங்காள்
வரம் ஒன்று வேண்டுகின்றேன்
அவருக்கும் என்மீது காதல் எனில்
அந்த காதல் காகிதம் தான்
அவர் கையில் என்றும் கிடைக்காமல் போகட்டும்!