கவிதை - நாகரிகம் - ரம்யா
கிராமத்து சோலையிலே மலராக நானிருந்தேன்
நகரத்து நாகரிகம் நலுங்காமல் உள்ளவர….
பாவாடை தாவணி இப்போ
மிடி சுடி ஆகி போச்சு
பின்னலிட்டு பூ முடித்த கற்றைமுடி ஏறிப்போய்
எலி வாலு குதிரை வாலு என்றபடி குறைஞ்சு போச்சு
கண்ணுக்கு மை கூட கலரகலரா வந்துடுச்சு
கொவ்வைபழ இதழும் இப்போ பளபளப்பு பூசிடுச்சு
மூக்குத்தி பூ இப்போ வாடி வதங்கி மறைஞ்சு போச்சு
காதடைக்கும் லோலாக்கு ஃபேஷனா வந்துடுச்சு
மஞ்சள் தேய்ச்சு குளிச்ச முகம் இப்போ
சாயம் பல ஏத்தி மெல்ல சரிஞ்சி போச்சு
மஞ்சத்தாலி கூட இப்போ பொன்னகையா மாறிப்போச்சு
மருதாணி பலருக்கு மறந்தே போச்சு
நகச்சாயம் பல வந்திறங்கி நாகரிகம் சொல்லிடுச்சு
கொலுசு மெட்டி பூட்டிய காலும் தான்
முக்காலி நாற்காலி ஏற பழகிடுச்சு
கண்ணாடி முன்ன நின்னா
என்னை தான் காணோமே
கண்டுபுடச்சு மீட்டுத்தான்னு
கண்ணிமையும் கெஞ்சிடுச்சு
இத்தனை மாறினாலும்
எத்தனை ஏறினாலும்
மனசுமட்டும் இன்னமும்
மண்வாசத்தை தான் தேடுது
மலராக நான் மாறி
என் சோலை நான் சேர மனசும் ஏங்குது