கவிதை - நரைக்காதல் - ரம்யா
கல்யாண நாளன்று என் கைக்கோர்த்து வந்தவளே!
நான் வீழ்ந்த போதெல்லாம் கைதூக்கி விட்டவளே!
தூரத்து நிலவாய் தான் இன்று நான் உனை பார்க்கின்றேன்
தொலைத்த என் காதலியை தான் தேடி நிதம் அலைகின்றேன்
பெரியோர்கள் வாழ்த்துரைக்க இல்லறம் ஏற்றுக்கொண்டோம்
காமமோ கர்மமோ பிள்ளைகளும் பெற்றக்கொண்டோம்
ஓயாமல் ஒழியாமல் ஓடிஓடி தேய்ந்து விட்டோம்
இடையே நம் காதலை போற்றத்தான் மறந்து விட்டோம்
அன்னையாய் ஆசானாய் அன்புத்தோழியாய் அவதாரம் பல எடுத்தாய் ஆனால்
தினம் ஒரு முத்தமும் ஒற்றை அணைப்பும் தரும் காதலியை மறைத்தாய்
காலசுழற்ச்சியில் கால் கடுத்த எனக்கு கனிவான கவனிப்புகள் தந்தாய்
தலை சாய்க்க மடி தேடிய போதெல்லாம் தீராத தனிமையும் தந்தாய்
குடும்பத்தை முன்னிருத்த குடைச்சல்கள் பல பெற்றாய்
வலி தீர விரைந்த போது மெதுவாக கைவிலக்கி கடந்து விட்டாய்
திசைமாறி போகிறேன் உணர்ந்து நான் திரும்பிவிட்டேன்
உன்னைவிட்ட இடம் தெரியாமல் ஏக்கங்கள் பல கண்டுவிட்டேன்
ஏக்கங்கள் தேங்கிய என் இதயம் இன்று துடிக்குதடி
உன் காதோர நரை யில் என் காதல் நெஞ்சு பூக்குதடி
காமம் கடந்த காதல் தான் எனது கண்டுகொள் என் கண்மணியே!
கட்டில்அணைப்பு கேட்கவில்லை உன் கைதீண்டல் ஒன்று போதும்
காதல் மழை இரைஞ்சவில்லை அவ்வப்போது உன் இதழ் தீண்டல் அது போதும்
நரைக் காதல் தான் நாயகியே ஆனாலும்
நரைக்காத காதல் இது