கவிதை - கண்ணே!உயிரே - ரம்யா
கண்ணே உன் கண்ணுக்குள்
நான் இறங்கி குடியிருப்பேன்
இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் அணைப்பில் மகிழ்ந்திருப்பேன்
கண்ணுக்குள் நான் போனால்
உன் கட்டழகு காண்பதெங்கே
உன் மூக்குத்தி உள்ளமர்ந்து
கண்ணழகை கண்டிருப்பேன்
அச்சோ உன் சிரிப்பழகு காணாமல் போவேனே
கண்மணியே உன் கழுத்தில் பாசிமணியாவேனே
தொட்டு உரசி முக்தி அடைவேன் நான்
என்றாலும் உன் இடையழகு காண்பேனா?
என்னவளே உன் கையில் வளைவியும் ஆவேன் நான்
உன் இடையழகு அத்துனையும் இமைக்காமல் இரசிப்பேன் நான்
பாவாடை மறைத்து வைத்த பாதம் காணமாட்டேனா?
இப்போதே உன் காலை அணைத்து முனகும் கொலுசாவேன்
அட பாதம் புகுந்துவிட்டால் எங்கே உனை காண்பேன் நான்
எதுவாக உரு மாறி உன் முழு அழகு காண்பேன் நான்?
உயிர்நிறைத்த உறவே உன் உயிருக்குள் உறைந்திடவா
ஒருயிராய் உருமாறி உள்ளழகும் இரசித்தடவா