கவிதை - கனவுக்காதலனே…! - சந்யோகிதா
என் கவிநாயகனே..!
உனைக்காண அதிதூரம் விரைகிறேன்..
காதல் கனவுகளினூடே!
வெறுமையாய் விடியலில் வீழ்கிறேன்..
நீர்த்தடாக விழிகளினூடே!
உணர்வுகள் உடலினுள் உறங்குகின்றன..
உன் தீண்டலுக்காக!
புதையல்கள் உள்ளத்தில் புதையுண்டுள்ளன..
உன் அகழ்வாராய்ச்சிக்காக!
ராகங்கள் மனதில் மெளனமாகின்றன..
நீ மீட்டெடுப்பதற்காக!
மொட்டுக்கள் மலராக காத்திருக்கின்றன..
உன் சுவாசத்திற்காக!
வேதனைகள் வேதாந்தம் செய்கின்றன..
உன் தோள்சாய்தலுக்காக!
காதல்கள் காவியங்களாக உருவெடுக்கின்றன..
நீ வாசிப்பதற்காக!
விழிகள் துயிலின்றி தவமிருக்கின்றன..
உனை வரவேற்கவென!
கனவுக்காதலனே..!
கடிகாரமுள் பார்த்து காத்திருக்கிறேன்..
என்றேனும் எனைத்தேடி என் வாசல் வருவாயென…!
{kunena_discuss:779}