கவிதை - மன்னவன் தாள்சேருமோ..? - சந்யோகிதா
மன்னவனே…!
வீழும் அருவியின் இடைவிடா ஓசையாய்
என் காதல்ஒலியின் அலைவரிசை
உன் செவியில் பதிகின்றதா?
என்றும் அழியா என் காதலை
பாறைச்சிற்பமாய் சிறப்புற பதிவிடுகிறேன்
பனிச்சாரலின் தூறலிலே!
காதல்கவி ஏந்திய விழி ஏடொன்று
உன் விழிக்கு காட்சியாகுமோ?
மலர்த்தேன் ருசிக்க ரீங்கார தேனியின்
செவ்விதழ்கள் சிறைப்படுமோ?
கார்கால குளிரில் நடுங்கும் பூவிதழொன்று
தீ அணைப்பில் சுகம் காணுமோ?
முழுமதி நாளில் மங்கள ஒளியில்
பைங்கிளி இரண்டு உறவாடுமோ?
நெடுங்கடலில் சிறகடித்த சிறு பறவையொன்று
தோள் கிளையில் இளைப்பாறுமோ?
கலையுணர்வு கொண்ட பெண்சிலையொன்று
சிற்பியின் தீண்டலில் உயிர்பெறுமோ?
நெடுந்தூரம் விரைந்தோடிய நதிமங்கையொன்று
கடல் மன்னவன் தாள்சேருமோ?
{kunena_discuss:779}