கவிதை - மனங்கொண்ட மன்னவனே..! - சந்யோகிதா
மனங்கொண்ட மன்னவனே..!
மணத்தூது ஏந்தி மங்கல நாளொன்றில்
மங்கை இவள் மனை தேடி வருவாயோ?
பத்தினி தெய்வம் கொண்ட காதல் தாண்டிய
பைத்தியக் காதலைப் பத்திரப்படுத்துகிறேன்..!
காணாத உருவம் உன்மேல் கொண்ட களங்கமில்லா
கற்பனைக் காதலைக் காவல் காக்கிறேன்..!
நம் முன்ஜனன காவிய ஒலைகளின்
காதல்தமிழ் உன் சிந்தையில் சிதறிவிட்டதோ..?
உன் மறதிப்பிணியின் வடுவாய் பேதை இங்கே
பாமர தனிமையில் மன்றாடுகிறேன்..!
பெண்ணிவள் கண்ணீர்வீழ்ச்சியின் ஓசை காரிருள்
சாந்தத்தில் நேச நெஞ்சத்தினை எட்டவில்லையோ..?
உயிரே...!
உன் நிழலாக உனைத் தொடர்கிறது என் எண்ணங்கள்..!
கட்டிவைக்க வழி அறியாமல் கவிதையாய் வரைகிறேன்..!
விரைவில் என் விழி கண்டு உன் உயிர்க்காதல் தருவாயோ..?
{kunena_discuss:779}