(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பின்தங்கிய மாணவி நான்…! - சந்யோகிதா

bookHeart

காதலா..!

காதல் கதிரவனைக்காண விடியல்வரை தவமிருந்து

அவன் இமைதிறந்ததும் ஏனோ வெட்கம் கொண்டு

ஓடி மறையும் நிலவுப்பெண்…!

தென்றல் ஆடவனின் விரல் தீண்டலில்

தேகம் நடுங்கி நாணத்தால் முகம் மூடிக்கொள்ளும்

தொட்டாற் சுருங்கி தேவதை…!

நதிநாயகனின் அபரிமித அன்பில் உருகி

தாவரத்தாயை நீங்கி அவன் மேனி தழுவிச்செல்லும்

நதிக்கரையோர மலர்மங்கை…!

நாடோடியாய் வாழ்ந்தாலும் நாடு கடந்து

தன் இணைதேடி இல்லற இனிமை காணும்

வேடந்தாங்கல் பைங்கிளி…!

மழைத்தலைவனின் வருகையால் காதல்போதையில்

ஏழுவண்ணப் பட்டுடுத்தி அழகாய் மலரும்

வானவில் தலைவி…!

பிறரறியா வண்ணம் புல்வெளி மன்னவனை

நிலவொளியில் கொஞ்சி பார் காணும் முன்னே

மறையும் பனிக்காதலி…!

இவையாவும் சொல்லும் காதல் சங்கதிகள் நானறியேன்..!

காதலின் வரையறையன்றி வரன்முறையும் அறியேன்..!

ஆம்….!

கற்றுத்தர ஆசான் நீ இன்றி காதல்கல்வியில்

பின்தங்கிய மாணவி நான்..!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.