கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதா
அரங்கேற்றிய பதிவுகளாலென்
ஆனந்தம் விளைவித்து
விலையின்றி அறுவடை கண்டும்
மனைவர தாமதிக்கிறாய்..!
முகம் காணாமலென்
சிந்தையில் சிம்மாசனமிட்டு
சிரிப்பை உதிர்க்கிறாய்...
நீ படைத்த முகநூலில்
உன் சிந்தனை தீண்டிய
எண்ணங்கள் என்னுள்
சரித்திரம் பல நிகழ்த்த
நிபந்தனையில் நான் கட்டுண்டு
நட்பு பாராட்ட மனமின்றியே
நாளும் உன் சுயசரிதம் தேடி
நீயறியாமல் வாசிக்கிறேன்
முகமூடியிட்ட வாசகியாக..!