கவிதை - நான் கடந்தபாதை - சந்யோகிதா
கால்கடுக்க நான் கடந்தபாதை
பல்லிரவுகளின் கடிகாரம் அறியும்
கண்கள் மறைத்த என் கண்ணீரின்
பல்லவிகள் பற்பல அவை பாடும்
ஏட்டளவில் கல்வி கற்று
கண்ணளவில் கனவு கண்டு
பெயரளவில் பயணிக்கிறேன்
பொன்சுமையாம் என் பணிகளை
இறக்கவும் இசைவின்றி..!
சுமக்கவும் சம்மதமின்றி..!
பாதத்தால் வருடியே போகிறேன்
பாதாளப் பாதையின்
முடிவொன்றைத் தேடி..!
சுமைதாங்கியாய் சில உறவுகள்
சிறப்பாய் சாட்சி சொன்னாலும்
சுரங்கமாய் சுற்றும் தீவினையை
சுமப்பதென்னவோ நானல்லவா..?