கவிதை - சொல்ல போகிறேன் - தானு
உலகம் என்னைக் கேலியாய் பார்க்கிறது
என்ன சொல்லப் போகின்றாய் என்று
சொல்லப்போகும் வார்த்தைகள்
சொர்பனமாய் போகத்தான் போகிறது
இருந்தும் சொல்லத்தான் போகின்றேன்
வற்றிய நதிகளில் நீரில்லை
வறண்டு போன ஊருக்குள்ளே
கட்டிவைத்த மாடுகளும் கட்டவிழந்து போயின
பச்சை நிறப் பசுமை மரங்களையும்
பற்றவைத்துப் படுக்க வைத்தனர்.
மனிதன் என்னும் உணர்வுச் சுடர்
ஒருமுறையேனும் தர்மத்துக்காய் எரிந்ததுண்டா?
ஏழைகளைச் சரிக்கவும்
ஏய்த்துப் பிழைக்கவும் தான்
கொடூரச் சுடர் அனலாய் எரிந்து
சாம்பலாய் கிடக்கின்றது இங்கே
மனிதரெல்லாம் எங்கே ?
மனித இயந்திரம் தான் இயங்குகின்றது இங்கே
ஆட்டி வைக்க அரசியல் பின்னணி
ஆசை காட்ட ஆயிரம் ஆளணி.
கூட்டுக்குளே நரிக்கூட்டங்கள்
கூடியிருந்து மனித வேட்டைகள்.
மாடி வீடு வேட்டைக்காரர்களை
மானம் போக விரட்ட வேண்டும்
மாசு அற்ற அரசியலை
மாற்றமாக மாற்ற வேண்டும்.