கவிதை - வெளிச்ச இரவு - தானு
காய்ந்த ஓலைக் குடிசையிலே
காரணமின்றி ஓர் உயிர்
காணாத சோகங்களைச் சுமந்தபடி
கானல் நீரான கனவுகளுடன் அங்கலாய்க்கிறது.
கருவறையில் நாள் முழுக்கச் சுமந்தாள்.
கால் கடுக்க வரப்பு வழி வேலை செய்தாள்.
மாலையிட்ட மணாளனை இழந்தும் இவள்
மானம் காக்க சிசுவதனை பெற்றெடுத்தாள்.
வண்டியிலே பிரசவம் அது இலவசமாய் நடந்தேற
வண்ணமிகு வடிவழகு சிசுவதனைக்
கண்குளிரப் பெண்ணவளும் பெற்றெடுத்தாள்.
வாழ்க்கை என்னும் வாள் நுனியில்
வழி தவறக் கூடாதேன
கண்விழியில் காத்து அவனை
கரையேறவும் செய்துவிட்டாள்.
உதிரத்தை உறிஞ்சி விட்டு
உதறிவிட்டான் தாயவளை
உணர்வுகளைப் புதைத்தபடி
உறவிழந்து கிடக்கிறாள் அவன் அன்னை
வாழ்க்கை என்னும் பாடத்திலே
கற்க வேண்டிய முதல் பாடம்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் அன்றோ..
வாழ வைத்த அன்னையை
வாழவைத்துப்பார் வாழ்க்கை சுவைக்கும்
வரலாறு செழிக்கும்.