கவிதை - நூறை தந்து ஆயிரம் ஏய்க்கவா? - ரவை
வீட்டுப்படியேறி கும்பிடும்
போட்டெம்மைஏமாற்றி
ஓட்டும் போடச்சொல்லி
நோட்டும் தருகின்றீர்!
விலைமாது தோற்றோடும்
வசியப்பேச்சுக்குனக்கு!
நிலைமறக்க வைக்கின்ற
நடிக்கும் திறனுனக்கு!
கூனிக்குறுகி வந்திங்கு
கூழைக்கும்பிடும், இன்று!
ஏணியேறி எட்டியபின்
எட்டியுதைப்பாய், பின்பு!
வெள்ளத்தில் வீடுபோய்
நடுத்தெருவில் நின்றாலும்
கள்ளச்சிரிப்புடனே
கைவிரிப்பீர் கச்சிதமாய்!
குடிநீர்க்கே குடத்தோடு
நடுத்தெருவில் அமர்ந்தாலும்
அடுக்குமாடி அரண்மணையில்
ஆனந்தமாய் இருப்பாய்!
மத்தியிலே அரசாள்வோர்
மலைமலையாய் வஞ்சகங்கள்
எத்தனையோ செய்தாலும்
மௌனமாய் இருந்திடுவாய்!
கைசுத்தம் இல்லாமல்
கறுப்புப் பணம் உள்ளோர்கள்
கைகட்டி வாய்பொத்தி
கூனித்தான் நிற்பார்கள்!
இருபதே ரூபாயை
முன்பணமாய் தந்தபின்னே
மிச்சத்தை கொடுக்காமல்
மோசடியும் செய்திடுவாய்!
கட்சி எதுவென்றாலும்
கயமையிலே பிரிவில்லை!
எட்டுத் திக்கிலுமே
எல்லோரும் அறிந்ததுவே!
எம் குமுறல் எல்லோர்க்கும்
எளிதாக தெரிந்திடவே
நோட்டாவே ஆதரிப்போம்
நல்வாழ்வு வகுத்திடுவோம்!