கவிதை - நானே நானா, யாரோ தானா? - ரவை
சுயமாக சிந்திப்போம்!
சிந்தித்து செயற்படுவோம்!
அயலார்சொல் அப்படியே
ஏற்பதனை நிறுத்திடுவோம்!
பால்வடியும் முகங்கொண்ட
பாப்பாவாய் இருக்கையிலே
நால்வர்சொல்ஏதெனினும்
நான் அறியேன், பராபரமே!
தாயெனக்கு, பாலூட்டும்
தருணத்தில், கற்பிப்பாள்!
தூயநல் அன்புடனே
தர்மங்கள் பேசிடுவாள்!
சிரிப்பதற்கு கதைசொல்வாள்!
சிந்திக்கவும் செய்திடுவாள்!
குறிப்புகளும் காட்டிடுவாள்,
குவலயத்தில் சிறந்திடவே!
ஆளுக்கொரு பாடத்தை
அன்றாடம் கற்பித்தார்!
நாள்தோறும் நன்னெறியும்
நயமாக உரைத்திட்டார்!
புராணம், இதிகாசம்
படிப்பித்தார் பலநாட்கள்!
இராமன், கிருஷ்ணனென
எத்தனையோ பெயர்சொன்னார்!
செய்யெனவும் தள்ளிடவும்
கொள் எனவும் தள்ளெனவும்
மெய் என்றும் பொய்என்றும்
விளக்கங்கள் தந்தார்கள்!
மொத்தத்தில் என்னையவர்
முழுவதுமாய் மாற்றியதால்
சுத்தமாய் எனையிழந்தேன்!
செதுக்கியதோர் சிலையானேன்!