கவிதை - தோழமை! - ரவை
ஆழிசூழ் உலகம்
அனைத்திலும் மாந்தர்
தோழமை பேணல்
தெரிந்ததோர் உண்மை!
வீணிலே வேற்றுமை
வம்புகள் வளர்த்து
மானிடர் பகைமை
வளர்த்தலை தவிர்ப்போம்!
கறுப்போ, வெளுப்போ
கட்டையோ, குட்டையோ
கருத்தினில் அறமுடன்
கண்ணியமாய் வாழ்வோம்!
மொழிகளில் ஆயிரம்
வழக்கினில் உண்டு!
வழிவழி வந்ததோர்
வாய்மையை காப்போம்!
நாடுகள், ஆறுகள்,
நாடிடும் உயிர்க்கு
கேடுகள் தவிர்த்து
சேர்ப்போம் நன்மைகள்!
சாதிகள், மதங்கள்
சண்டையை நீக்கி
போதிமரத்தடி
புத்தனாய் வாழ்வோம்!
பெண்மையை போற்றும்
பண்பினை வளர்ப்போம்!
கண்ணியமாய் வாழ்ந்து
தூய்மையை காப்போம்!
உலகம் உய்ந்திட
ஒற்றுமை பேணுவோம்!
கலகம் தவிர்ப்போம்!
கருத்துடன் வாழ்வோம்!
ஏழ்மையோ, செல்வமோ
யாவருக்கும் ஒன்றென
வாழ்த்துப்பா கூடியே
வாய்மணக்கப் பாடுவோம்!