கவிதை - இறைவனின் அழைப்பு! - ரவை
சந்தேகங்களை, தயக்கங்களை,
தூக்கியெறி! என்னை நம்பு, குழந்தாய்!
அதிசயங்கள் புரிந்தால்தான்
எனை நம்புவாயா, குழந்தாய்?
சந்தேகங்கள் பயன்தராது!
அவைகளை மதிக்காதே!
1.நான் சிந்தனையில் தெளிவு!
நான் பக்தியிலே தூய்மை!
நான் இசையிலே இனிமை!
நான் இயற்கையிலே எழில்!
நான் ஆலயத்தில் விக்கிரகம்!
நான் சொர்க்த்தில் ஆனந்தம்!
உனக்கு சேவை செய்வது என்கடன்!
2.நான் உனது அழையா விருந்தாளி!
நீ அழைக்காமலே வந்துவிட்டேன்
எங்கெங்கோ எனை நீ தேடினாய்
எங்கெங்கும் நான் இருக்கும்போது!
கருணையின் சிறுதுளி,
ஒற்றுமையின் நினைவு,
எங்கிருந்தாலும் ஓடிவருவேன்,
எனை நீ எந்த மூலைக்கு விரட்டினாலும்!
3.நான் சந்தனத்தில் நறுமணம்!
நான் தீபத்தின் சுடரொளி!
நான் மலர்களின் வாசனை
நான் ஆறுகளின் பெருவெள்ளம்!
நான் வான்வெளியின் தென்றல்!
நான் கடலின் பெரும்பரப்பு!
நான், உன் அறிவின் கூர்மை!
நான், தானியங்களின் அருஞ்சுவை!
4.உன் இதயத்தில் நான் உள்ளேன்!
ஏன் வீணே எங்கேயோ தேடுகிறாய்?
நான் ஒருநாள் விருந்தாளியல்ல!
உன் இதயமே என் பிருந்தாவனம்!
நீயும் நானும் வேறுவேறல்ல!
கடலும் உப்பும்போல் இணைந்தவர்கள்!
நான் உன் சுவாசத்தின் காற்று!
பல பிறப்புகளாக இணைந்துள்ளோம்!
5. கவலை தவிர்! மகிழ்ச்சியுறு!
அவசரப்பட்டு தளர்வடையாதே!
இன்பங்கள் அனைத்தும் உனதே!
உலகின் செல்வமனைத்தும் உனதே!
இருப்பதை யாவும் பிறருக்கு கொடு!
என்னிடம் உள்ளதை உனக்கு தருவேன்!
இந்தச் செய்தியை எங்கணும் பரப்பு!
எப்பவும் என்னை நம்பிடு, குழந்தாய்!