கவிதை - யார் செய்த குற்றம்? - ரவை
இறைவா! நீயே சொல்!
இது என் குற்றமா?
குறைகள் கண்டென்னை
களைகிறார், யாவருமே!
கருப்பு நிறமென்ன
கறையா? குறையா?
கண்ணா! உனைமட்டும்
காலமெலாம் தொழுகின்றார்!
குட்டை கட்டையென
கேலி செய்கின்றார்,
குட்டை அகத்தியனை
கும்பிட துடிக்கின்றார்!
திக்குவாய் என்றென்னை
திட்டுகிறார் தோழியரே!
எக்காலும் வாய்திறவா
இறைவனுனை தொழுகின்றார்!
முகமுனக்கு அழகில்லை
மூலையிலே நில்லெனவே
வகைவகையாய் சாடுகிறார்,
முகத்தை சுளிக்கின்றார்!
அழகுக்கு இலக்கணத்தை
யாரறிவார் இப்புவியில்?
தொழுகின்றார் அனுமனையே
துதிக்கின்றார் அனுதினமே!
அழகாக இல்லாமை
யார்பிழை எனக்கேட்பின்
வழவழ வார்த்தைகளில்
விடைதந்து ஓடுகிறார்!
பிறவியிலே அழகின்றி
பெற்றதுயார் தாயன்றோ!
நிறமெனக்கு தந்ததுயார்?
நீயன்றோ நாராயணா!
இறங்கிவா இக்கணமே
இவர்க்கொரு பதில்சொல்லு!
இரக்கம் காட்டியெனை
இரட்சிக்க வந்துவிடு!