(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தர்ம சங்கடம்! - ரவை

இரண்டு, மூன்று வயது
இளம் குருத்தைக்கூட
வெறிபிடித்து சீரழிக்கும்
காமுகரை நினைத்தால்,
தெருவில் அவரை நிறுத்தி
தோலுரியப் புடைத்து
சிரச்சேதம் செய்துவிட
கொதிக்கிறது ரத்தம்!

இந்நாட்டுச் சட்டங்கள்
இவர்களை திருத்தாதபோது
என்ன செய்வதென்று
எனக்குத் தெரியவில்லை!
பின்னிருந்து வந்தகுரல்
"பொறுமகனே" என்றது!
"என்ன சொன்னாய் என்று
இன்னொருமுறை சொல்!"

காமுகரை மக்களே
கழுவிலேற்று என்றேன்!
"ஆம் என்று ஆதரிக்க
எனக்கும்தான் ஆசை!
ஏமாளி அனாதைகளை
செய்யாத குற்றத்திற்கு
கோமாளி மக்கள்தினம்
கொல்வதை அறியாயா?

குழந்தை திருடரென்றும்
கொன்றாய் பசுவையென்றும்
பிழைசெய்யா அப்பாவிகளை
பலரும் அடித்துக் கொல்லும்
குழுக்களாய் வாழும் நாட்டில்
தண்டிக்கும் உரிமைதன்னை
வழங்கலாமா என்று யோசி!

யோசித்துப் பார்த்தபோது
உண்மையை உணர்ந்துகொண்டேன்!
யோசனை செய்யா மக்கள்
உள்ளதோர் பரந்தநாட்டை
வேஷங்கள் போட்டு ஏய்ப்போர்
வாழ்ந்திடும் பாரதநாட்டை
கோசலைராமன் கூட
காப்பது கடினம் உண்மை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.