கவிதை - சுதந்திரம் - ரவை
ஆகஸ்ட் 15 பாரதம் சுதந்திரம்
எய்திய திருநாள்!
இந்நாளை கொண்டாட
எமக்குண்டு மகிழ்ச்சி!
உன்னத நாளிதனில்
உம்மிடம் பகிர்ந்திடவே
என்னுள்ளம் விழைகிறது
எண்ணங்கள் எழுகிறது!
நாட்டுக்கு விடுதலை நன்மை
நலிந்தோர் எழுவதும் உண்மை!
நாட்டில் வாழ்ந்திடுவோர்
நலம்பல பெறுவதும் பெருமை!
பாட்டெழுதும் எனக்கோர்
புரியாத விஷயத்தை
நாட்டமுடன் படிக்கின்ற
நண்பர்களே! கேளுங்கள்!
தெருவெங்கும் பாலாறு!
தரித்திரமே கிடையாது!
வரலாறு காணாத
வளமைகள் ஒருகோடி!
இருந்தாலும் தனிமனிதன்
இன்னும் அடிமைதான்!
உருவில்லா மனதுக்கு
ஒடுங்கிவிடும் சிறுமைதான்!
கோபம், ஆசை, குரோதம்,
காதல், மோகம், பாசம்,
தாபம், பெருமை, உடைமை,
தன்னலம், பதவி, கர்வம்,
லோபம், குரோதம், மதம்,
மாற்சரியம் இவைபோன்ற
ஆபத்துகளின் பிடியிலிருந்து
வெளியில் வருவாய், தனிமனிதா!