(Reading time: 2 - 3 minutes)

கவிதை - எண்ணங்கள் இடையே! - ரவை

எப்போதும் எதையேனும்
எண்ணுவதை நிறுத்து!
தப்பாமல் நீ பெறுவாய்
தனைப்பற்றிய ஞானம்!
 முப்பொழுதும் உனக்குள்ளே
வாழ்கின்ற வெறுமையினை
அப்போது உணர்ந்ததுமே
அறியாமை அகன்றிடுமே!

வேறெதையோ எப்போதும்
மனதினிலே எண்ணுவதால்,
உருவமுடன் அனைத்தையும்
உனதுமனம் தேடுவதால்,
அருவமாய் உன்னுள்ளே
வாழ்வதனை நீ அறியாய்!
ஒருகணமே உன்னை நீ
வெறுமையிலே வைத்துவிடு!

மழையின் குரல் கேட்டுப்பார்!
காற்றின் ஒலி உற்றுக்கேள்!
அழகான மேகத்தின்
அன்னநடை எழிலைப்பார்!
பழக்கமிலா புதியவர்க்கு
பாசத்தை அளித்துப்பார்!
குழப்பமிலா புரிதலுடன்
உனைநீயே உணர்ந்திடுவாய்!

சந்தோஷம் அடைந்திடவே
சிறியவையே போதுமடா!
எந்நேரமும் உனைப் பிரியா
உயிர்மூச்சின் ஒலியைக்கேள்!
சன்னமாய் சத்தமிடும்
குருவிகளின் எழிலைப் பார்!
சின்னச்சின்ன பார்வையிலே
சித்திரங்கள் தோன்றுது, பார்!

உள்ளத்துள் அமைதியினை
எப்போதும் காத்துக்கொள்!
எள்ளளவும் கவனத்தை
இழக்காமல்  இருந்திடுவாய்!
தெளிவாக உள்மனதை
திண்ணமுடன் நிறுத்திடுவாய்
அள்ள அள்ள குறையாத
ஆனந்தம் அனுபவிப்பாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.