கவிதை - யுக கவிஞன் பாரதி! - ரவை
நேற்று பாரதி பிறந்தநாள்! அவருக்கு வணக்கம் செலுத்தவே இக் கவிதை
ஒவ்வொரு சொல்லும் அணுகுண்டு!
உனக்கெவர் இங்கே ஈடுண்டு?
நவநவமாய் உன் கவியுண்டு!
நற்றமிழ் தேனாய் சுவையுண்டு!
அவலம் நீக்கிய உன் பாட்டுண்டு!
அகிலம் புகழ்ந்திடும் பொருள் உண்டு!
புவனம் செழித்திட உன் அறிவுண்டு!
பாரதம் வென்றிடும் உன் சொல் கேட்டு!
விடுதலை பெறுமுன் அதைப் பாடி
மகிழ்வுடன் ஆடிக் களித்தவன் நீ!
எடுத்த காரியம் யாவினும் வெற்றி!
என்றே பாடி களித்தவன் நீ!
குடுகுடுப்பைக்காரன் பாட்டெழுதி
கயவர் குடலை கிழித்தவன் நீ!
ஒடுங்கிய நிலையில் இருந்தோரை,
உயர்வுறப் பாடுபட்டவன் நீ!
பாருக்குள்ளே நல்ல நாடென்றே
பாரதநாட்டினை புகழ்ந்தவன் நீ!
சீருயர் செந்தமிழ் மொழி போலே
செகத்தினில் வேறிலை என்றவன் நீ!
கருத்துடன் காவியம் படைத்தவன் நீ!
கடவுள்பக்தியை வளர்த்தவன் நீ!
பெருமை பற்பல சேர்த்தவன் நீ!
பாரதி! உமக்கெம் தலைவணக்கம்!