கவிதை - இதென்ன நியாயம்? - ரவை
இதென்ன நியாயம், இறைவா!
இறங்கிவந்து நீயேசொல்லேன்!
பதவி பெற்றால், பகவான் அருளாம்!
பறிபோனால் அதுவே, பிழை எனதாம்!
வெற்றி பெற்றால், வானவன் வரமாம்!
சற்றே சரிந்தால், எனது தவறாம்!
நல்லது நடந்தால், நான்முகன் பரிசாம்!
அல்லது வந்தால், அடியேன் குறையாம்!
தேர்வில் வெற்றி, தேவனின் கொடையாம்!
தோல்வி அடைந்தால், எனது விதியாம்!
குலுக்கலில் பரிசு, கடவுளின் கொடையாம்!
கிடைக்காவிடிலோ, ஆசையே தவறாம்!
இதென்ன நியாயம், இறைவா!
அசையுமா அணுவும், உனதருளின்றி!
வெற்றியும் தோல்வியும், இரண்டுமே நீதான்!
எனக்கெதும் வேண்டாம், விடுவித்திடுவாய்!