(Reading time: 2 - 3 minutes)

கவிதை - வெளிநாட்டு வெள்ளச்சாமியின் குமுறல் - குணா

manSad

பிறதேசம் சென்றேனே..
பரதேசம் ஆனேனே..

பிறந்த ஊர் பிரிந்து
தொலைதூரம் தொலைந்தேனே..

நம் மண்ணை உதறித்தள்ளி
புழுதிக் காட்டில் புகையானேனே..

சொந்த பந்தம் துறந்து
சோகக் காடு சென்றேனே...

தொடர்வண்டி ஏறி ஊர் பிரிந்தேன்
தொடர்கதையாய் உயிரும் வலிக்குதே ...

நவ நாகரிக ஆடை அணிந்து
நயமா நானும் விமானம் ஏறினேன்...

வந்து நின்ற இடமும் தெரியல
வரவேற்க பூமாலை இங்கில்ல...

கொண்டு வந்த துணிப்பைய
தலையணை யாக்கி நான் படுத்தேன்
வெள்ளக்கார தொர ராசா
நமக்கு இங்க இன்னும் சுதந்தரம் குடுக்கல...

பாச தெரியாம
பேச தெரியாம
வயிற்று பசிக்கு மொழி தேடுன..

கண்ணு இருண்டு
கையும் நடுங்குது ..
கெளரவம் தொலைச்சு கையும் ஏந்துனேன் ..

அப்படி இப்படி பாதி வயிறு நிறைய
என்ன எப்படி னு யோசிச்ச நெறய...

தங்கச்சி கலியாணம் ரெண்டு மாசத்துல
அப்பாவோட ஆபரேசன் அடுத்த வாரத்துல
தாலி கழட்டி அனுப்பி வச்ச அம்மாகிட்ட
வட்டி கேட்டு வாசல் வருவா ரெண்டு நாளுல...

அனுப்பி வச்ச ஏஜெண்டு
இன்னும் தகவல் சொல்ல ல..
கூட்டிப் போகும் ஏஜெண்டு
கூட்டத்துல காண ல..

நீ நோம்பிருந்து பெத்த மக
நோயில தா துடிக்குறனே...

நா
ஏமாந்த கத சொல்ல என் நெஞ்சுல தெம்பில்லை
ஒன்ன ஏமாத்த தெரியாதே இப்போ நா என்ன பண்ண ?
அம்மா.........

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.