கவிதை - என்ன செய்ய போகிறாய் - ஜெப மலர்
உணவு சங்கிலியில்
உலகம் சமச்சீர் அடைய
எளியவனை வலியவன் அடக்க
வலியவனுக்கு மேலே வலியவன் ஆள
அனைவரையும் ஆள்கிறான்
அகிலத்தை படைத்தவன்...
படைத்தவனை எதிர்த்து பரம்பொருளை ஜெயித்து
பாரினை அடிமைப்படுத்த பல திரைகள் அமைத்து
திட்டங்கள் தீட்டுகிறான் மனிதன்....
ஆதாரமின்றி அச்சாணியின்றி
அந்தரத்தில் வலம் வரும் வையகத்தை
கைப்பிடிக்குள் சிறைபடுத்தி
காலத்தை மாற்றி அமைக்க
இயற்கையோடு போராடுகிறான் மனிதன்...
உயிரற்ற பாறையை செதுக்கி
உயிருள்ள மனிதன் போல் வரைந்தாலும்
உன்னால் உயிர் கொடுத்திட கூடுமோ?
படைத்தவன் வழியிலே சென்று
புது பூமி கண்டிட துடித்தாலும்
இணையற்றவனுக்கு இணையாக
எதையேனும் செய்யதான் கூடுமோ?
சந்திரன மண்டலத்தில் உலாவினாலும்
உன் காலடி பதித்து நடந்திட தான் கூடுமோ?
எதையும் கொண்டு தான் வரவில்லை
எடுத்து செல்லவாவது முடியுமா?
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே இருக்கும் இடைவெளியை
மகிழ்ச்சியோடு கொண்டாட அறியாமல்
ஒருவனை ஏய்த்து மற்றொருவனை வீழ்த்தி
சேர்த்து வைப்பதில் லாபம் தான் உண்டா?
அறிந்த வாழ்க்கை சிறிது காலமே
அதை அறிந்து நீ வாழ்ந்திடு...
வாழ்ந்திடும் காலம் வரை
மற்றவரையும் வாழ விட்டிடு....
இறப்பிற்கு பின்
இறைவனோடு கழித்திட
வேண்டியதை இங்கே சேர்த்திடு.....