கவிதை - வாழ்வு அவருக்காக... - ஜெப மலர்
இயற்கையை படைத்து இறைவன்
மனிதனின் கரத்தில் கொடுத்து
நன்மை தீமை என இரு தீர்வு அளித்து
வாழ்க்கை கணக்கை தொடங்கி விட்டார்...
படைப்போடு சேர்த்து உணர்வுகளுக்கு
இரண்டிரண்டு தீர்வை தீர்வில்லாமல்
தீர்க்கமாக அளித்தும் விட்டார்..
மகிழ்ச்சியை கொடுக்கும் அன்பே
மனவருத்தத்தையும் வாரி வழங்குகிறது..
சங்கடம் தரும் பிரிவே
சந்தோஷத்தின் தொடக்கமாகவும் மாறி விடுகிறது..
இன்னல்கள் கசப்புகளை அழிக்கும் மறதியே
இன்பத்தையும் சுவடில்லாமல் அழித்து விடுகிறது...
ஆக்க துடிக்கும் அறிவே
அழிவிற்கும் ஆரம்பமாகிறது...
என்ன ஒரு விந்தை...
எதை தேடி எதன் பின்னே ஓடி
எதை சாதித்து என்ன செய்வது?
ஒரே பூமியை பகுத்து கண்டங்களாக்கி
வாழ்ந்து பெருகுங்கள் என்றார் இறைவன்...
உலகத்தையே ஒரே கைக்குள் கொண்டு வந்து
எதை பெற முயலுகிறான் மனிதன்?
அதிகாரம் கொடுத்து பதவியை அளித்து
தேசத்தை சீர்படுத்திடு என்கிறார் அவர்...
நாட்டை சுரண்டி அந்நிய வங்கியில் சேர்த்து
எதை செய்ய துடிக்கிறான் மனிதன்...
சுழலும் பூமி இறைவனின் சுண்டு விரலில் நிற்க
சுண்டு விரலை பறித்து தன் உள்ளங்கையில்
நிறுத்த திட்டமிடுகிறான் மனிதன்...
அறிவை கொடுத்தவர் அமைதி காக்க
அறிவு பெருகி ஆணவம் நிரம்பி
அகந்தையால் கொடிகட்டி பறக்கிறான் மனிதன்...
எங்கே போகிறது உலகம்...
தடுக்கி விழுந்தால் எழுவது அவர் பாதமல்லவா?
கொடுக்கும் அவருக்கு எடுக்கவும் உரிமை உள்ளதல்லவா?
வாழ்வது ஒரு முறை
வாழ்ந்திடு இறைவனின் சொற்கேட்டு
விடை தெரியாத உலகில்
சுவடில்லாமல் அழியுமுன்னே
சீர்செய்திடு மனதை...
கோள்கள் அத்தனையில் பூமியை கொடுத்தது
கேடில்லாமல் வாழ்வதற்கு தான்..
சிந்தித்திடு... செயல்படு... வாழ்ந்திடு...
உயிர் கொடுப்பதும் அவரே
உயிரை காப்பதும் அவரே
அதை எடுப்பதும் அவரே...
உண்மையோடு வாழ்ந்திடு அவருக்கே...