கவிதை - சிந்திப்பாயா - ஜெப மலர்
நாடி நரம்புகளுக்கிடையே
நகர்ந்து செல்லும்
குருதியின் நிறத்திலே
குறை ஏதும் இல்லை...
மூச்சுகாற்று எப்போதும்
நாசி வழி சென்று திரும்புவதிலும்
மாற்றம் ஏதும் இல்லை...
துடிக்கிற இதயம் ஒவ்வொரு முறையும்
லப்டப் லப்டப் என்பதிலும்
விதிவிலக்கு ஏதும் இல்லை...
மாற்றம் எங்கே வந்தது?
உயர்சாதி தாழ்சாதி என்று...
சிந்திப்பாயா...நீ...சிந்திப்பாயா
மானிடராய் பிறந்த அனைவரும்
மாசற்ற இறைவனின் தூயசாயலே...
தாழ்ப்படுத்தி மிதிக்கும் உயிர் ஒவ்வொன்றும்
நிகரில்லா இறைவனின் திருஉருவே...
அடிமைப்படுத்த நீ நினைப்பது
முடிவில்லா இறைவனின் வல்லமையை...
தீட்டென்று நீ உதறுவது
தீர்ப்பு கொடுக்கும் இறைவனின் படைப்பையே...
சிந்திப்பாயா... நீ... சிந்திப்பாயா
சிந்திக்க மறுக்கும் மானிடனே
சிரிக்கிறான் இறைவன் உன்னைக் கண்டு...
மரணத்திற்கு பிந்தைய வாழ்வினிலே
மரணித்து போகும் இந்த சாதி வெறி
மன அமைதி தேடி நீ அலைவாய்
மறந்து போவார் இறைவன் உன்னை...
சிந்தித்திடு..நீ.. சிந்தித்திடு