கவிதை - உனக்கு நீயே - ஜெப மலர்
எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும்
எட்டி உதைக்கிறது....
தேடி செல்லும் வழியெல்லாம்
தடுத்து நிறுத்துகிறது...
முயற்சிகளிலெல்லாம் தோல்வி
முட்டு கட்டையாய் நிற்கிறது...
இதுவும் கடந்து போகும் என்று
இமை சிமிட்ட மறுத்து நிற்கிறேன்..
சிமிட்டும் விழியில் இருந்து
சிந்துவது என் உதிரமல்லவா...
மௌனம் காக்கிறேன்
மனதை தகர்க்கும் வார்த்தை
உதிர்ப்பது என் இதழல்லவா...
சிந்தும் கண்ணீரும்
உதிர்க்கும் வார்த்தையும்
வெளிப்படுத்த துடிப்பது
என் இயலாமையையே...
ஏற்று கொள்ள மாட்டேன்
தோல்வி ஒன்றும் முடிவு இல்லையே
தோல்வி கண்டு துவண்டிட மாட்டேன்
தோற்று நானும் போக மாட்டேன்...
வடுக்களாய் அமைந்த தோல்வியின் மேல்
வழிகளை அமைத்து வெற்றி பெறுவேன்...
உலகிற்கு வரும் முன்னே
தாயின் வயிற்றில் கருவான நாளிலே
என் ஓட்டம் தொடங்கி விட்டது..
தொடங்கிய ஓட்டத்தை
தொடர்ந்து ஓடிடுவேன் காலம் வரும் வரை...
உலகின் ஒளி என் மேல் பட
உணர்ந்த அந்த நொடியே
என் வெற்றி தொடங்கி விட்டது...
பத்து மாதம் காத்திருந்து
நான் பெற்ற முதல் வெற்றி போல்
காலம் முழுவதும் காத்திருந்தாலும்
முத்திரை பதிப்பேன் இவ்வாழ்விலே...