(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பௌவம் - ஜெப மலர்

அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கும்

அலைகளின் நளினம் கண்டதும் 

ஓய்வின்றி தூறி கொண்டிருந்த

துன்ப சாரல் விலகி போனதே... 

என்ன மாயம் செய்தாய் நீ!!! 

உன் எழிலில் அமைதி கொள்கிறது மனம்...

இரைந்து கொண்டிருக்கும் உன் இரைச்சல் 

இனிய கானமாய் பாய்கிறது என் செவியில் 

தொலைதூரம் தெரியும் ஆழ்கடல் வாளிப்பு

ஆழ் மனதையும் ஆனந்திக்க செய்கிறதே... 

தொட்டு செல்லும் நீரின் ஜில்லிப்பு

உஷ்ணமான கோபத்தை உறைய வைத்திடுதே... 

என்ன மாயம் செய்தாய் நீ!!! 

உன்னை மீண்டும் மீண்டும் காண

உள்ளம் அலைபாய்கிறதே... 

பௌர்ணமி ஒளியில் உன் வனப்பை காண

பல ஆயிரம் விழிகள் வேண்டுமே... 

மறைமதி தினத்தில் உன் ஈர்ப்பில்

மதி மயங்கி சரிகிறதே... 

உன் மடியில் தவழும் நாவாய் 

வெள்ளை தாமரையாய் மிளிர்கிறதே... 

என்ன மாயம் செய்தாய் நீ!!! 

அலைபாயும் ஆழ் மனது

அமைதி கொள்கிறது உன் பொலிவில்... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.