கவிதை - உனக்கே சொந்தம் - ப்ரியசகி
இவ்விழிகளிரண்டில் காவியமாய் வழியும்
ஒட்டுமொத்தக் கனவும் காதலும் உனக்கே சொந்தம்...
இம்மனதினில் ரகசியமாய் பூட்டி வைத்திருக்கும்
எண்ணிடலங்கா ஆசைகளும் உனக்கே உரித்தானவை...
இக்காரிகையின் நெஞ்சத்தில் மூச்சு முட்டக் குவிந்து ஓர்
ஓரமாய் ஒளிந்திருக்கும் ஏக்கங்களும் உனக்கே சொந்தம்...
இமைகள் இமைக்க மறந்து, இதழ்கள் ஓயாது உன் பெயரை
உச்சரிக்க, உன்னை நாள்தோறும் எதிர்பார்த்து இவ்வுடலில்
இழையோடும் உயிரும் உனக்கே உபயம்...
சரித்திர காலத்தைப் போல் உடல் மெலிந்து
இடை நலிந்து தன் தலைவனுக்காய் தவமிருக்கும்
இத்தலைவியின் காத்திருப்பும் உனக்கே சொந்தம்...
இத்தனையும் உனக்கே சொந்தமாய் நான் இங்கே
இருக்கையில், நீ மட்டும் உயிரற்ற வெறும் வண்ணக்
காகிதங்களை சொந்தமாக்கிக் கொள்ளும்
முயற்சியில் ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால் மேலைநாட்டில் தவமிருப்பதும் ஏனோ???