(Reading time: 2 - 4 minutes)

கவிதை - கருவறையில் ஓர் காவியம்...  - ப்ரியசகி

அன்னையின் கருவில் உதித்துவிட்டேன்...

எனைச் சுற்றி ஏராளமான விமர்சனங்கள்

நான் ஆணா? பெண்ணா? என்று...

ஏனெனில் எனக்கு முன் மூன்று

பெண் முத்துக்களாம்...

என் தந்தையும் பாட்டியும் என் அன்னையை

வசைபாடுகிறார்கள் அவளால் எதிர்க்க

இயலாது என்ற தைரியத்தில்...

நான் பெண்ணாய் பிறந்திட்டால் நாங்கள்

இருவரும் இறந்துவிட வேண்டுமாம்...

நான் ஜனிக்க என் தந்தையும் தான் காரணம்

அவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லவா?

என்ற வினா எழுகிறது... அதை பிறகு பார்க்கலாம்

என் தாய் என் மீது கை வைத்து அழுகிறாள்..

என்னால் உணர முடிகிறது..

எதோ சொல்ல வாயெடுக்கிறாள்...

சத்தமிடாதீர்கள்! நான் என் அன்னை அழுகுரலோடு

உரைப்பதை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்...

பெண்ணாய் ஒரு மங்கையை ஈன்றெடுக்க நான்

பெருந்தவம் செய்திருக்க வேண்டும்!!!

என் செய்வேன் நான்.. இந்த ஈரைந்து திங்கள்

மட்டுமே கண்மணி போல் உனை கருவிற்குள்

வைத்து பாதுகாத்து சீராட்ட இயலும்...

வீட்டிற்கு வெளியில் தான் மலராத

அரும்புகளையும் கசக்கி முகர துடிக்கிறார்கள்

என்றால், வீட்டிற்கு உள்ளேயும் கருவறையில்

இருந்து நேரே கல்லறை

அனுப்ப திட்டமிட்டு விட்டார்களே!!!

கண்ணே நீ பெண்ணாய் பிறந்து

விட்டால் என்செய்வேன்??

நான் கேட்டுக் கொண்டிருப்பதை

அறியாமல் பேதை அவளோ பெருங்

குரலெடுத்து அழுகிறாள்...

அதற்கு செவிசாய்க்கக் கூட

வீட்டில் எவருமில்லை..

நீங்கள் கேட்டுக் கொண்டு

இருக்கிறீர்கள் தானே!

பாவம் அவளுக்கு ஆறுதல்

உரைக்கக் கூடாதா??

நான் தீர்மானித்து விட்டேன்

உன் துயர் தீர்க்க..

சில காலம் உன் கருவில்

வாழும் பாக்கியத்தை இறைவன்

அளித்ததே எனக்கு பேரின்பம்...

உன் உயிரிலிருந்து எனதுயிரை பிரிக்க

முடிவு செய்து விட்டேன்... மொத்தமாக ஒரே

ஒரு முறை அழுது தீர்த்து விடு...

நாளைய சூர்யோதயம் எனக்கில்லை..

உனக்காவது நன்னாளாய் விடியட்டும்...

இன்று வரை உன் கருவில் ஓவியமாய்

வாழ்ந்த நான், நாளை முதல் உன்

நினைவுகளில் காவியமாய்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.