கவிதை - ஏன் என்ற கேள்வி? - ப்ரியசகி
விடியலுக்காக ஏன் காத்திருக்க வேண்டும்?
இருளிலும் ஒளி காண உன் கூரிய விழிகள்
விழித்துக் கொண்டிருக்கும் போது...
விதி என்று நினைத்து ஏன் வருந்த வேண்டும்?
மதியை உபயோகித்தால், விதியும் மதியோடு
சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு உள்ள போது...
குட்டை போல் ஓரிடத்தில் ஏன் தேங்க வேண்டும்?
நதியாய் நில்லாது பாய உன் மனமும், வழி தர
அகன்ற அகிலமும் தயாராக இருக்கும் போது...
தோல்வியை ஏன் ஏற்க வேண்டும்?
மீண்டுமொரு முறை முயற்சித்தால் கைதொடும்
தூரத்தில், வெற்றிக்கனி காத்துக் கொண்டிருக்கும் போது...
கடந்ததை நினைத்து ஏன் மனம் கலங்க வேண்டும்?
நீ எதிர்பாராத, உனக்கான பொக்கிஷத்தை அளிக்க,
காலம் உன்னை வழி நடத்திக் கொண்டிருக்கும் போது...
பாதையும் பயணமும் உன்னுடையவை...
இலக்கை அடையும் முன் ஓய்வெடுப்பதில் தவறில்லை
ஆனால் துவண்டு பின் வாங்குவது மரணத்திற்கு ஒப்பாகும்...