கவிதை - மீண்டு வாராய்! - ப்ரியசகி
நிலவே மேகங்களிடையே மறையாதே
உன் குளிர்ச்சியான தொடுகை எவராலும்
உணரப்படாமல் போகலாம்...
ஆதவனே அகன்ற ஆழியில் புறப்பட்டு
பர்வதத்தின் பின்னால் ஒளியாதே
உன் வெம்மையான கரங்கள் எவராலும்
ஸ்பரிசிக்க முடியாமல் போகலாம்...
இவையிரண்டும் மறைந்தாலும் ஒளிந்தாலும்
மீண்டும் இவ்வுலகை சந்தித்தே ஆக வேண்டும்
அது காலத்தின் கணக்கு...
ஆனால் பெண்ணே நீ கூட்டுக்குள் கட்டுண்டால்
உன்னை இவ்வுலகம் உயிருள்ள பொம்மையாக்கி
உருத்தெரியாமல் அழித்துவிடும் ஜாக்கிரதை!
பெண்மையே, வண்ணத்துப்பூச்சியாய் கூட்டை
உடைத்து இப்பாரை சந்திக்க மீண்டும் வாராய்...
பிறர் உனை சுட்டெரிக்கும் நிலையை மாற்றி,
அற்பமாக உனை எண்ணும் கூட்டத்தை
சுட்டெரிக்க, எல்லையில்லா துணிவோடு
மீண்டு வாராய்...