கவிதை - அவன் வருவானா? - ப்ரியசகி
போருக்கு அழைப்பு வந்தாகிவிட்டது..
திருமண அழைப்பு தந்தாகிவிட்டது...
நாட்டைக் காக்கும் எண்ணம்
மேலிட்டது போலும்...
மண உடை தரிக்க வேண்டியவன்
இராணுவ உடை தரித்து
விடைபெற விழைந்தான்...
கன்னிகை அவளோ மருதாணியால்
சிவந்த கைகளாலும், திருமண
பூரிப்பால் மலர்ந்த வதனத்தோடும்,
புன்னகை பூக்க, விரைவில் வெற்றியோடு
திரும்புமாறு கூறி வழி அனுப்புகிறாள்..
நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக..
நாட்கள் மட்டும் அதன் போக்கில் விரைகிறது...
காரிகை அவளோ தன் உளம் கொண்டவனை
வரவேற்று, கதைகள் பல பேச காத்திருக்கிறாள்
விரிந்த புன்னகையோடும், விழி நிறைந்த நீரோடும்..
இன்றும் இப்படி காத்திருக்கும்
கன்னிகைகள் எத்தனையோ பேர்....
உறவினர் சூழ மணக்கோலம் காண
அவளுடைய அவன் வருவானா???