கவிதை - மேகமகளால் பாவம் கழுவிட இயலுமா? - ப்ரியசகி
நானும் எத்தனையோ முறை கண்ணீர் சிந்தி
மண்ணின் புனிதத்தை காக்க நினைக்கிறேன்...
நிதம் மங்கையவள் படும் துயர் நினைத்து, அழுது
அழுது கரைந்தாலும், அவள் பாதுகாப்பிற்கான
உத்திரவாதமும் தர இயலவில்லை..
அவளுக்கு அநீதி இழைத்த மாந்தரை
தாங்கும் இந்த மண்ணின் பாவத்தை
கழுவவும் இயலவில்லை என் பொன்னீரால் கூட...
மனதில் மிதமிஞ்சிய வெறியுடன், நங்கையை
வெறும் சடலமாய் கருதி, மரணம் வரை அவளை
துன்புறுத்தி, ஓர் இனத்தை அடியோடு அழிக்க
வெறிகொண்டு, நல்லவன் எனும் போர்வையில்
வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மனிதர்கள்
இருக்கும் வரை இந்த மண்ணின் புனிதத்தையும்,
பெண்ணின் புனிதத்தையும் காக்க வழியேயில்லை!
இருந்தும் என்றேனும் ஒருநாள் இந்த பாவம்
குறையாதா என்றெண்ணி, மீண்டும் மீண்டும்
மண்ணை நனைத்து பாவம் கழுவ முயற்சித்துக்
கொண்டிருக்கிறேன் பெண்ணவள் பாதம் தொட்டு!!!!