கவிதை - இரகசியங்கள் இரகசியங்களாகவே... - ப்ரியசகி
சில நேரங்களில் அல்ல பல நேரங்களில்
இரகசியங்கள் காக்கப்படுவதே நல்லது...
புரிந்துகொள்ளாதவர்க்கு இரகசியங்கள்
என்றும் சந்தேக நீரூற்று தான்...
சந்தேக நீரூற்று நம்பிக்கை எனும் படகை
முழுதாய் தன்னுள் அமிழ்த்திவிடும்...
நம்பிக்கை இல்லா வாழ்க்கை, புயலில்
சிக்கிய பாய்மரம் போல் திசைமாறிவிடும்...
காலம் இரகசியங்களுக்கு விடை
தரும் வேளை, காயப்பட்ட நெஞ்சங்கள்
அருகில் இல்லாமலும் போகலாம்...
அப்போது இழந்த நல்ல மனிதர்களையும்,
வாழ்வையும் நினைத்து வருந்தக்கூட
காலம் துணை நிற்காது...
ஆதலால் இரகசியங்கள் காக்கப்படுவது
பலரின் நன்மையை உறுதிப்படுத்துமேயானால்,
அவை உடைபடாதிருத்தலே உகந்தது...
இன்றும் பல இரகசியங்கள் இரகசியங்களாக
வாழ்வதால் மட்டுமே பல உறவுப்பாலங்கள்
சிதையாமல் புதுப் பொலிவுடன் உறுதியாக
கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன...