(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஏனோ? - ப்ரியசகி

உனைக் கண்டால் மட்டும் காலம்

 

கண்முன் உறைவதேனோ?

 

பேச நினைக்கும் நொடியில், வார்த்தைகள்

 

கோர்க்க இதழ்கள் தயங்குவதேனோ?

 

நின் முகம் கண்டால், சட்டென இமைகள்

 

தாழ்ந்து, நிலத்தில் கண்கள் பதிப்பதேனோ?

 

உன் வார்த்தைகள் செவிகளை எட்டினால்,

 

சகலமும் நின்று, வேறெதுவும்

 

நினைவில் நிற்க மறுப்பதேனோ?

 

உன் பாதத்தடத்தில் பயணிக்க நெஞ்சம்

 

ஆணையிடும் போது, மனம் நிலை

 

கொள்ளாது பறப்பதேனோ?

 

உன்னோடு கழிக்கும் சில மணித்துளிகளை,  

 

நிதம் எதிர்பார்த்து உள்ளம் உருகுவதேனொ?

 

பேசிவிட்டு புறப்பட எண்ணம் கொண்டாலும்,

 

கால்கள் உன்னை விட்டு நகர மறுப்பதேனோ?

 

எனைக் கண்டு உன் இதழ்கள் புன்னகை

 

பூத்தால், படபடக்கும் நெஞ்சம்

 

நொடியில் நாணம் கொள்வதேனோ?

 

இத்தனை வினாக்களுக்கும் விடை

 

தெரிந்தும் தெரியாதது போல்,

 

உன்னிடம் உண்மையை ஒப்புக்

 

கொள்ள உள்ளம் மறுப்பதேனோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.