கவிதை - நேரமில்லை... - ப்ரியசகி
வெண்பனி மேவிய சாலையில்,
பூவாய் பொழியும் பொன்பனி மேனி தழுவ,
காற்றோடு கைகோர்த்து உலாவ நேரமில்லை...
மரகத பாய் விரித்த வயல்வெளியில்,
மண்மணம் நாசி நுழைய, ஓய்வாய் அமர்ந்து
கண்களால் குளிர்ச்சியை பருக நேரமில்லை...
வெள்ளியாய் உருகி ஓடும் கால்வாய் நீரில்,
துள்ளி விளையாடும் மீன்களுக்கு இடையில்
நீராடி, பொழுதை கழிக்க நேரமில்லை...
உற்றார் உறவினர், குடும்பமாய் சேர்ந்து
நிதாதனமாய் ஒரு வேளை
உணவுண்ண நேரமில்லை...
பெற்றோர் பெரியோர் கூறும் அனுபவ
அறிவை சார்ந்து சிறார்களை
வளர்க்க நேரமில்லை..
எதேச்சையாய் நிகழும் சந்திப்பில்
கூட, நின்று பேச நேரமில்லை...
இயந்திரங்களோடு பேசவும்
பழகவும், இயந்திர கதியில்
வளரவும் மட்டும் நேரமுள்ளதோ???
எதற்காக? எந்த மகிழ்ச்சியை
பெற, கையிலிருக்கும் சொர்க்கத்தையும்,
அருகிலிருக்கும் சொந்தத்தையும் விட்டு,
தொலைதூர விண்மீனை வீழ்த்த
ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறோம்??