கவிதை - குழந்தை - இரா.இராம்கி
வண்ண வண்ண கனவோ
வாசனை நினைவோ
பேசும் மழையோ
சிரிக்கும் வெயிலோ
ஓடி வரும் நதியோ
ஒளிரும் முழுமதியோ
தூங்கும் மெழுகுச்சிலையோ
துள்ளும் உயிர்ச்சிலையோ
மழலை காற்றோ
குறும்புகளின் ஊற்றோ
மந்திரக்கோலோ
தந்திர வாலோ
பல மொழிகள் பேசும் உனதிதழ்கள்,
அன்பெனும் ஓர் மொழியில் புன்னகைக்கும் அதிசயமோ
சிந்தையில், நீ சின்னதொரு பூமாலையோ
விந்தையில், நீ விநோத விண்மீன் கீற்றோ
வானவில் பார்வைகளோ
வாசலில் விளையாடும் வசந்தமோ
பள்ளிக்கு செல்லும் பட்டாம்பூச்சியோ;
அள்ளி அணைக்க விழையும் அல்லியோ;
நீ என் வாழ்வின் அற்புதக் காட்சியோ;
அன்பின் உன்னத சாட்சியோ