கவிதை - போதும் விட்டுவிடு எங்களை!! - இரா.இராம்கி
கண் கொட்டும் விண்மீன்கள்
நம்மைப் பார்த்து
கண்ணடித்து பரிகாசம் செய்கிறது;
தென்றலுக்கு தலையாட்டும் தென்னங்கீற்றுகள்
எள்ளி நகையாடுகிறது;
சுதந்திரமாய் உலா வரும் தெரு நாய்கள்,
மூடிய ஒன்றிரண்டு முகங்ளை
கண்டு குரைக்காமல்
பரிதாபப்படுகிறது
புழுக்களும் பூச்சிகளும்,
என்னில் சிறிய கிருமிக்கு அஞ்சி
அடங்கி நிற்கிறாயே என்று நகைக்கிறது;
இயற்கைத் தாயே!
அடக்கமின்றி அச்சமின்றி
ஆணவம் கொண்டோம்;
தயக்கமின்றி
தயவுமின்றி
நின்னை அழித்தோம்;
இச்சைக் கொண்டு
இரக்கமின்றி நின்னை இம்சித்தோம்;
மயக்கம் கொண்டு
மாய வலையில் விழுந்தோம்
தாயே! துடிக்கிறது இங்கு பல நெஞ்சம்;
தயைக் காட்டு நீ
கொஞ்சம்;
போதும் விட்டு விடு,
எங்களை;
உணர்ந்தோம் உணர்வூப்பூர்வமாக,
இனி உள்ளார்ந்த அன்புடன் எல்லா உயிர்களையும் நேசிப்போம்;
இனி வாழ்வோம், நாளும் இயற்கையோடு இயைந்து!!