கவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி
இத்தலைப்பு-திருக்குறளில்,மருந்து என்னும் அதிகாரத்தில், ஒரு குறளின் முதல் மூன்று சொற்கள்
***************************************
இயற்கையின் படைப்பில் மனித உடல் மா வரம்;
நாளும் பேணாவிடில்,தேயும் தினம் அதன் தரம்;
அற்றது அறிந்து கடைப்பிடித்தாலே,
அதற்கு நல்ல உரம்;
நாவின் ருசிக்கு புசிக்காமல் வயிற்றின் பசிக்கு புசித்தாலே போதும்;
நல்ஆரோக்கியம் நமக்கு வாய்க்கும் நிச்சயம்;
நம் பாரம்பரியம் தந்ததே பல சிறுதானியம்;
அதன் அருமை அறிந்து உண்டாலே உடலுக்கு ஊட்டம்;
மஞ்சளும் மிளகும் மாமருந்தாம்;
மகிமை அறிந்து நாம் உணவில் சேர்க்கும் நேரம்,
மறைவாய் கிருமிகள் யாவும் ஓடுமாம்;
சுக்கும் திப்பிலியும் நோயை எதிர்க்குமாம்,
சீரகமோ செரிமானம் கூட்டுமாம்;
நாட்டுக்காய்கறிகளும் நல்ல கனிகளும்
நமக்கு நாளும் உடலுக்கு நலம் சேர்க்கும்;
நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும், கூடவே பலம் சேர்க்கும்;
மனதிற்கும் நல்ல திடம் சேர்க்கும்;
செரித்த பின் உண்ட உடலே செழிக்கும்;
அறுசுவையும் அளவாய் உண்டால் வளம் கொழிக்கும்;
நொறுங்கத் தின்றால் நம் ஆயுள் நீளும்;
சிரித்து வாழ மனதில் பாரம் யாவும் நீங்கும்;
அற்றது அறிந்து கடைப்பிடிப்போம்;
உற்றது உணர்ந்து உடலுக்கு சேர்ப்போம்;
கற்றது கற்றபடி கடைப்பிடிப்போம்;
பெற்றது போதுமென பெருமகிழ்ச்சி கொள்வோம்;
கல்லாததும் கற்று கடைப்பிடிப்போம்;
பொல்லாத பழக்கங்களை புறக்கணிப்போம்;
ஓவ்வாத அயல்நாட்டு உணவை ஓரம் கட்டுவோம்;
இவை யாவும் நாம் நாளும் பின்பற்றினாலே போதும்;
இம்மையில் நோயற்ற வாழ்வு நிச்சயம்;
இன்பங்கள் நம் வாழ்வில் கூடுவது சத்தியம்;